Saturday, 05 April 2014 08:45 |

தாய்க்கு ஒரு கவளம் சோறு!
பாத்திமா நளீரா
என் ஒடுங்கிப் போன நிழலுக்குள்ளே – நான் முடங்கிக் கொள்கிறேன். மகனே... உன்னைப் பிரசவித்த வேதனையை விட நீ உதைக்கின்ற வார்த்தைகளால் உயிரில் உதிரம் கொட்டினாலும் – ஓர் உவகைதான் என்ன அழகாக பேசுகிறாய்.
என் கண்களின் ஒளியில் எழுந்து நின்ற நீயா... என்னை “தடுமாறும் குருடி” என்கிறாய் சிரிப்புத்தான் வருகிறது உன் வாளைப் போன்ற வார்த்தைகள் – நீ சிறு வயதில் வடித்த எச்சிலுக்கு சமனடா.
என் சிரிப்பில் சிறகு முளைத்து சிகரம் கண்ட நீ முதுமையின் முடிவுரையில் இருக்கும் எனக்கு.. “அம்மா” என்ற வார்த்தையை யாசகம் போடுவாயா?
இமைமூடாது – உன் இருப்பை பாதுகாத்த – எனக்கு இறப்பை வேண்டி நேர்ச்சை வைக்காதே! நீ மதலையடா.. மரணத்தின் ரேகைகள் என்னுள் மண்டியிட்டது உனக்குப் புரியாது.
விலைவாசி பட்டியலில் விலை இல்லா – இந்த தாய்க்கு – ஒரு கவளம் சோற்றுக்கு கணக்கெடுப்புச் செய்கிறாயா? விதியிடம் – உன் கையால் விஷத்தைக் கொடுக்காதே ஏனென்றால் சுவர்க்கத்தில் நான்தான் – உனக்கு என் சோற்றை ஊட்டி விடுவேன்! நன்றி வீரகேசரி வாரவெளியீடு 09-03-2013
source; http://fathimanaleera.blogspot.in
|