அம்மா என்றொரு அழகான தேவதை |
![]() |
![]() |
![]() |
Tuesday, 29 March 2011 09:56 | |||
அம்மா என்றொரு அழகான தேவதை நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில் நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம் உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும் எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்
பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே
கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும் கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும் உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே
மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும் பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே
அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து படுக்க போகும்வரை பாடு பட்டவளே
எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க படாத பாடுபட்டு பரிதவித்த போதும் உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே
பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும் விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும் பச்சை குழந்தையாய் என்னை பாவித்து குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே
அம்மா என்று அழைத்தாலே போதும் கவலைகள் எல்லாம் கரைந்து போகும் கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும் அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்.
|